புதன், 13 மே, 2020

கவிதாஞ்சலி





கலைகளின் அரசியே
கலைமாமணியே, கலைஅரசியே!

தைரியமுன் மறுபெயரே
தன்னம்பிக்கையுன் தனிச்சிறப்பே

கரு முதல்
கடைசி வரை
கருமமே கண்ணாயிருந்தவளே

பெற்றோரை தம்பிள்ளையாய்
பேணிக் காத்தவளே 
மற்றோரையும் உறவாய்
மதித்துப் போற்றியவளே

தூய அன்பால்
நாய்க் குட்டிகளை  
உருகச் செய்தவளே
காந்திமதி கல்யாணியின்   
'பெரிய'குட்டியயே 

நெட்டிப் பந்தாட்டத்திலும் 
பூப் பந்தாட்டத்திலும்
மேசைப் பந்தாட்டத்திலும்
தங்கப் பதக்கங்களை
மலையாய்க் குவித்தவளே
கோப்பைகளைக் கொண்டு  
கோபுரம் செய்தவளே
சுழற்கேடயங்களை தக்க
வைக்கும் சூட்சுமமறிந்தவளே

அன்னையின் தமக்கையே
எனது அன்னையே,
சுந்து என்றழைக்கும்
சுந்தரச் சித்தியே

இருசக்கர வாகனத்தில்
மீண்டும் ஒருமுறை
எனையேற்றிச் செல்வாயா…

வசைச் சொற்களால் 
மீண்டும் ஒருமுறை
எனை வசைபாடுவாயா…

ரோட்டோர பரோட்டா
மீண்டும் ஒருமுறை
வாங்கித் தருவாயா…

திருநெல்வேலி அல்வா
மீண்டும் ஒருமுறை
சுவைக்கத் தருவாயா…

மீனாட்சி கோயிலுள் 
நுழைவுச்சீட்டு இல்லாமல்
மீண்டும் ஒருமுறை
நுழைய வைப்பாயா…

குலதெய்வ கோவிலுக்கு 
மீண்டும் ஒருமுறை
கூட்டிச் செல்வாயா…

கலையாத நினைவுகள்
தந்து விட்டு
எங்கள் வாழ்வை
களையிழக்கச் செய்து
சென்று விட்டாயே
அரசியே, கலைஅரசியே!

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

அகவை 30

இரு பத்துகளை  எம்பி  
இன்று 
அகவை முப்பது

திரும்பிப் பார்க்கின்றேன்  ..

பரபரக்கும் உலகினில்
பரபரப்புக்குப்  பஞ்சமில்லாமல்
பரபரப்பாய் நான்

என்னவென்று தெரியாமல்
எப்படி என்று அறியாமல்
புரியாத பந்தயத்தில்
பந்தயக்குதிரையாய் நான்

தியானம் தினம் செய்
உடலை பயிற்சி செய்
நாவடக்கம் பழகென
எட்டு முழ வேட்டிக்கு
போட்டியாய் என் பட்டியல்

நொடி நொடியாய் வாழ்கவென்று
கோடிப்  பேர் சொன்னாலும்
நொடிக்கொருமுறை புரிந்தாலும்
கட்டுக்கடங்காமல் எம்மனம்
கட்டவிழ்த்த குதிரையாய்

தொட்டுவிடும் தூரமா
தொலைதூரமா தெரியவில்லை
வாழ்வின் பல ஆசைகள்

முன்னே விழிக்கின்றேன்
அடுத்த முப்பதை ...

கற்ற பாடங்களும்
கடந்த பாதைகளும்
நடக்கின்றன முன்னே
உற்றத் துணையாய்

முதல் முப்பது
முத்தாய் போனது 
இரண்டாம் முப்பது 
இன்பமாய்ப்  போகட்டும்
செழிப்பாய்ப்  போகட்டும் 
செம்மையாய்ப்  போகட்டும்
அறியாத இடங்களில்
தெளிவாய் இருக்கும் 
புரியாத சக்தியின்
உண்மையை உணர்த்திப் போகட்டும்!!

















  















சனி, 29 ஜூலை, 2017

கவிதை அருள்வாய் நிலவே

வானவீதி அளக்கும் வெண்ணிலவே
கவிஞனின் அளவுகோலே பொன்னிலவே
உன்னை வரையாதவன் ஒவியனல்ல
இயற்றாதவன் கவிஞன் அல்ல
ரசிக்காதவன் மனிதனே அல்ல

இரவு கண்ட உன்னையும்
இரந்து கண்ட கன்னியையும்
ஒப்பிட்டு ஓதுதலே 
கவிஞர் கல்லூரியில்
கண்ணியமாய் கரைசேர
ஒப்புயர்வு வழியாகும்

பல ஆயிரம் வருடங்களாய்
பல்லாயிரம் கவிஞர்கள்
பல்லாயிரம் கோடி கவிதைகளில்
இயற்றினார் உன்னை

நகலெடுக்க மனதில்லை
பிரதி எடுத்துப் பயனில்லை
படியெடுக்கப் பிடிக்கவில்லை

வார்த்தை தேடினேன்
புது வார்த்தை தேடினேன்
தமிழ் அகராதியில் !

அகராதியோ எள்ளி நகைத்தது
எட்டிப் போகச் சொல்லி இடித்தது

இடித்த வேகத்தில் இடறி
விழுந்தேன்
ஓடினேன் வேங்கையென

உன்னைக் கண்டு
கவிதை புனைய

நீயோ சொல்லாமல் கொள்ளாமல்
தேய்பிரையென தேய்ந்து விட்டாய்

துவளாமல் திணறாமல் திகைக்காமல்
வந்த வெளிதனை
வெறிக்காமல் பார்த்தால்
சிதறாமல் எனக்கும் கொடுத்துள்ளாய்
சிறு கவிதையினை

புரியவைத்தாய்
ஒப்பிடுவது மட்டும் கவிதையல்ல
நினைப்பதற்கு ஒப்பனை சேர்ப்பதும்
கவிதையே என !











வியாழன், 19 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு

கணிணியில் குறியீடு செய்து
வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி
பேஸ்புக்கில் எதிர்ப்பைத் தெரிவித்து
துடிப்பாய் ட்விட்டரில் டீவீட்டி
அவசர கதியாய் மறக்கும் 
மற்றவர் போல், நாங்களும்
வீழ்வோம் என நினைத்தாயோ ?

மரபு காக்க களம் இறங்கிப் போராடும் எம் தமிழ் மக்களுக்கு சமர்ப்பணம் ! 

வெள்ளி, 6 ஜனவரி, 2017

வாழ்க்கை கண்ணோட்டம்

வகையாய்  மாறுகின்றது
வாழ்வின் கண்ணோட்டம்.

பம்பரமாய்  சுழலாமல்,
அவசரமாய் பறக்காமல்,
இயந்திரத்தில் மூழ்காமல்,

சில நேரங்களில்
கண்ட
சில மனிதர்களாலும்,

சில நாட்களில்
உணர்ந்த
சில நிகழ்வுகளாலும்.

திசை திருப்பின   
வாழ்வின் மீதுள்ள 
பயத்தை நன்றியாக
நடுக்கத்தை நெகிழ்ச்சியாக
ஏக்கத்தை ஏகாந்தமாக.

வேண்டுதல் நிறைவேற்றுவது
இறைவனோ இயற்கையோ
தலைவிதியோ தற்செயலோ
இக்கண வேண்டுதல் ஒன்றே!

பயத்தை பொசுக்கி
நடுக்கத்தை நசுக்கி
நன்றியை பெருக்கி
நெகிழ்ச்சியை நிலைநிறுத்துக!

செவ்வாய், 6 டிசம்பர், 2016

அஞ்சலி

சந்தியாவின் மகளே
சரித்திரத்தின் துகளே

துணிவின் இலக்கணமே
தேயா தனித்துவமே

தூர நின்றவர்களை
உன் தோரணை கண்டு
வியக்க வைத்தாய்

எதிர்த்து நின்றவர்களை
உன் ஆளுமை கண்டு
அயர வைத்தாய்

பக்கத்தில் நின்றவர்களை
உன் பெருமை கண்டு
ஏங்க வைத்தாய்

மீண்டு வருவாய் என
நினைத்த தொண்டனை
மீளாத் துயரில் மூழ்கடித்தாய்

இரு விரல் காட்டி
எதிர்த்தவரை ஓட்டி
வரலாற்றின் ஏடுகளை
புரட்சியால் புரட்டிய தலைவியே !
நீ என்றும் புரட்சித் தலைவியே !




ஞாயிறு, 30 அக்டோபர், 2016

மழைக்கால சிந்தனைகள் !

இன்று அதிகாலை !! (10 மணி) அளவில், ஒரு புத்தகத்தோடு முற்றத்தில் நின்றேன். அத்தி பூத்தாற் போல மூன்று நாட்களாய் இங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது. அத்தி கூட சில நேரம் விரைவாய் பூக்கும், இந்த மழை !! தமிழ்நாட்டில் இதை தூறல் என்பார்கள். இங்கே மழை , மழை, ஜாக்கிரதை  என தொலைக்காட்சியில் தொலை....நோக்கோடு பயமுறுத்துகிறார்கள்.
தூறலோ.. மழையோ, நிலத்திற்கு காதலனை பார்த்ததில் மிக மகிழ்ச்சி. மோகனமாய் மனம் மகிழ மணம் வீசிக் கொண்டிருந்தாள்.

என் வீட்டுக் கண்ணாடி கதவுகளுக்கு வெளியில் ஒரு இள வயது மரம்.  இள பெண்களை போல் சிக்கென்று செழுமையாய் நின்றது. சே, என்ன மனது இது !! மரத்திற்கு கூட மகளீரை உவமையாய் காட்டுகிறது என எண்ணத்திற்கு இணையாய், இன்னொரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

காற்றும் வேகமாக அடித்துக் கொண்டு இருந்தது. கீழ்ச்சட்டையை சரி செய்யும் மடோனாவைப் போல மரமும் தன்னை சரி செய்து கொண்டே இருந்தது. (அட , மறுபடியும் பெண் உவமை).

விஷயத்திற்கு வருவோம்! ஒவ்வொரு முறை காற்று அடித்த ஓய்ந்த பின்பும் மரம் தன் பழைய நிலைக்குத் திரும்பியது. பின் அடுத்த நொடியே காற்றில் மிதந்து, பின் தன்  நிலைக்கு திரும்பியது.கண்ட ஞாபகம், புயல் காற்றில் உடைந்து கிடந்த மரத்தையும் , பக்கமே நின்ற மூங்கில் மரத்தையும். ஓ , இது தான் சூக்குமமொ, புயலுக்கு வளைந்து கொடுத்தால் வாழ்க்கையும், எதிர்த்து நின்றால் துயரமுமோ  ? மனித வாழக்கையில் வரும் புயலையும் இப்படி சமாளிக்க முடியுமோ ? முடியும் என நினைக்கிறேன்,பல நேரம் உணர்ந்துள்ளேன். சில பேர் நினைக்கலாம், வளைந்து கொடுப்பதா என்று !! வளைந்து கொடுக்க கற்க வேண்டும் ,குனிந்து படியாய் படுக்க அல்ல !

அதே மர இலையின் நுனிகளில், நீர் கோர்வைகள், சொட்டுகளாய் உருமாற்றம் அடைந்து கொண்டு இருந்தன. மரம் , அதன் இலைகள், எவ்வளவு தான் ஆடினாலும், அவை கீழே சிதறவில்லை. மாறாக ஒரு சொட்டின் அளவு வந்தவுடன் தானாய் தரையை தொட்டன. நாமும் வாழக்கையில் நமது கனவுகளை இப்படித் தான் கையாள வேண்டுமோ ?  எவ்வளவு புயலுக்கு மத்தியிலும் ,உடும்புப்பிடியாய் கனவுகளைக் கவ்வி , நிறைவேறும் வரை நிலையாய் நிற்க வேண்டுமோ ?இரண்டாவது பாடம்.

வலது பக்கத்தில் ஒரு புறா , இந்த மழையினூடே ,ஒளிக் கம்பத்தின் மீது ஒய்யாரமாய், ஆரவாரமின்றி அமைதியாய்  அமர்ந்து இருந்தது. அந்த அழகை படம்பிடிக்க, கைப்பேசியின்  நிழற்பட பயன்பாட்டை நிறுவினேன். படம்பிடிக்க முடியவில்லை. கைபேசியோடு சண்டை போட்டுக் கொண்டு இருந்தேன். சட்டென்று என்னை எண்ண மின்னல் வெட்டியது. இந்த மழையிலும் குளிரிலும்  அமைதியாய்  அமர்ந்துள்ள புறாவை படமெடுக்க, கைபேசியின் காரணத்தால் அமைதியின்றி நான் !! இதில் யாருக்கு ஓரறிவு அதிகம் ?

இப்படி பாடங்கள் படங்களாய் என் முன்னேவிரிய , அமெரிக்கக் கிளை வருண பகவான் எனக்கு பாடம் கற்பிக்க கோபமாய் முடிவு செய்தார் போலும் !! என்னயா தூறல் என்றாய், இதோ பார் என்று. மழை மழையாய் பொழிந்தது !!



                                                                                        - சிந்தனைகள் தொடரும் ..


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

உறக்கம்

தழுவ நினைத்தால்
தறிகெட்டு ஓடுகிறாய்
அணைக்க நினைத்தால்
அணைக்காமல் நகர்கிறாய்

வேண்டிய நேரத்தில்
வர மறுக்கிறாய்
வேண்டாத நேரத்தில்
வலிய வருகிறாய்

மண்ணில் உள்ள
எல்லோருக்கும் சமமான
பொருள் நீ
அருளும் நீயே
ஆனந்தமான என்
அழகான உறக்கமே !


செவ்வாய், 19 ஏப்ரல், 2016

மாய அறை

எண்ணங்கள் குவியலாய்
எழும் அறை
பாரங்கள் சீட்டுக்கட்டாய் 
சரியும் அறை
கனவுக் கோட்டைகள்
கட்டும்  அறை
நிஐத்தைக் கோட்டை
விடும் அறை
அரசனாவதும்
ஆண்டி ஆவதும்
அரை நொடியில் 
நிகழம் அறை

என் குளியலறை !

வெள்ளி, 25 டிசம்பர், 2015

சீட்டுக்கட்டு கோபுரங்கள்

மனிதரின் வாழ்க்கை
சீட்டுக்கட்டு கோபுரங்கள்
பார்த்து பார்த்து
ஒவ்வொரு சீட்டாய்
சேர்த்து சேர்த்து
எழுப்புகின்றார் அவரது கோபுரத்தை

அவர் நினைத்த உயரத்தில்
ஆனந்தம் அடைகின்றார்
ஆனந்தம் சில நொடிகளே

பக்கத்து வீட்டுக்காரரின்
உயர்ந்த கோபுரத்தை
காணும் வரையில்
இல்லை எதிர்
கோபுரத்தின் அழகில்
மயங்கும் வரை ..

ஆனந்தம் சில நொடிகளே
ஆனந்தம் சில நொடிகளே
செருக்காய் மாறும் முன்
கோபுரத்தின் பிரமாண்டம்
பிரமாண்டமாய் மறைக்கிறது
பல நேரங்களில்
நம் கண்ணை

மறந்து விடுகிறோம்
நடுவில் ஒரு சீட்டு
விழுந்தாலும் நாம்
தரையில் என்று

மறந்து விடுகிறோம்
கோபுரமே ஆனாலும்
அவை சீட்டுகளே
வெறும் காகித
சீட்டுகளே என்று