ஞாயிறு, 30 அக்டோபர், 2016

மழைக்கால சிந்தனைகள் !

இன்று அதிகாலை !! (10 மணி) அளவில், ஒரு புத்தகத்தோடு முற்றத்தில் நின்றேன். அத்தி பூத்தாற் போல மூன்று நாட்களாய் இங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது. அத்தி கூட சில நேரம் விரைவாய் பூக்கும், இந்த மழை !! தமிழ்நாட்டில் இதை தூறல் என்பார்கள். இங்கே மழை , மழை, ஜாக்கிரதை  என தொலைக்காட்சியில் தொலை....நோக்கோடு பயமுறுத்துகிறார்கள்.
தூறலோ.. மழையோ, நிலத்திற்கு காதலனை பார்த்ததில் மிக மகிழ்ச்சி. மோகனமாய் மனம் மகிழ மணம் வீசிக் கொண்டிருந்தாள்.

என் வீட்டுக் கண்ணாடி கதவுகளுக்கு வெளியில் ஒரு இள வயது மரம்.  இள பெண்களை போல் சிக்கென்று செழுமையாய் நின்றது. சே, என்ன மனது இது !! மரத்திற்கு கூட மகளீரை உவமையாய் காட்டுகிறது என எண்ணத்திற்கு இணையாய், இன்னொரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

காற்றும் வேகமாக அடித்துக் கொண்டு இருந்தது. கீழ்ச்சட்டையை சரி செய்யும் மடோனாவைப் போல மரமும் தன்னை சரி செய்து கொண்டே இருந்தது. (அட , மறுபடியும் பெண் உவமை).

விஷயத்திற்கு வருவோம்! ஒவ்வொரு முறை காற்று அடித்த ஓய்ந்த பின்பும் மரம் தன் பழைய நிலைக்குத் திரும்பியது. பின் அடுத்த நொடியே காற்றில் மிதந்து, பின் தன்  நிலைக்கு திரும்பியது.கண்ட ஞாபகம், புயல் காற்றில் உடைந்து கிடந்த மரத்தையும் , பக்கமே நின்ற மூங்கில் மரத்தையும். ஓ , இது தான் சூக்குமமொ, புயலுக்கு வளைந்து கொடுத்தால் வாழ்க்கையும், எதிர்த்து நின்றால் துயரமுமோ  ? மனித வாழக்கையில் வரும் புயலையும் இப்படி சமாளிக்க முடியுமோ ? முடியும் என நினைக்கிறேன்,பல நேரம் உணர்ந்துள்ளேன். சில பேர் நினைக்கலாம், வளைந்து கொடுப்பதா என்று !! வளைந்து கொடுக்க கற்க வேண்டும் ,குனிந்து படியாய் படுக்க அல்ல !

அதே மர இலையின் நுனிகளில், நீர் கோர்வைகள், சொட்டுகளாய் உருமாற்றம் அடைந்து கொண்டு இருந்தன. மரம் , அதன் இலைகள், எவ்வளவு தான் ஆடினாலும், அவை கீழே சிதறவில்லை. மாறாக ஒரு சொட்டின் அளவு வந்தவுடன் தானாய் தரையை தொட்டன. நாமும் வாழக்கையில் நமது கனவுகளை இப்படித் தான் கையாள வேண்டுமோ ?  எவ்வளவு புயலுக்கு மத்தியிலும் ,உடும்புப்பிடியாய் கனவுகளைக் கவ்வி , நிறைவேறும் வரை நிலையாய் நிற்க வேண்டுமோ ?இரண்டாவது பாடம்.

வலது பக்கத்தில் ஒரு புறா , இந்த மழையினூடே ,ஒளிக் கம்பத்தின் மீது ஒய்யாரமாய், ஆரவாரமின்றி அமைதியாய்  அமர்ந்து இருந்தது. அந்த அழகை படம்பிடிக்க, கைப்பேசியின்  நிழற்பட பயன்பாட்டை நிறுவினேன். படம்பிடிக்க முடியவில்லை. கைபேசியோடு சண்டை போட்டுக் கொண்டு இருந்தேன். சட்டென்று என்னை எண்ண மின்னல் வெட்டியது. இந்த மழையிலும் குளிரிலும்  அமைதியாய்  அமர்ந்துள்ள புறாவை படமெடுக்க, கைபேசியின் காரணத்தால் அமைதியின்றி நான் !! இதில் யாருக்கு ஓரறிவு அதிகம் ?

இப்படி பாடங்கள் படங்களாய் என் முன்னேவிரிய , அமெரிக்கக் கிளை வருண பகவான் எனக்கு பாடம் கற்பிக்க கோபமாய் முடிவு செய்தார் போலும் !! என்னயா தூறல் என்றாய், இதோ பார் என்று. மழை மழையாய் பொழிந்தது !!



                                                                                        - சிந்தனைகள் தொடரும் ..