வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மழலை மொழி

பிறந்த குழந்தை 
பெற்றோரிடமிருந்து கற்று 
மட்டும் கொள்ளவில்லை, 
கற்றும் கொடுக்கிறது 
மழலை மொழியை !


சனி, 21 செப்டம்பர், 2013

சிக்கென ஓர் சித்த மருத்துவர் !!

சித்த மருத்துவர் சிக்கென்று  இருப்பதால் 
சில்லறையைச்  சிதற விட்டேன் பதிலுக்கு 
பில்லைக்  கொடுத்து பில்லியனைப்  புடுங்கி 
பித்துப்  பிடித்து பிதற்ற வைத்தார் !



திங்கள், 16 செப்டம்பர், 2013

தூக்கம்

நேற்று நள்ளிரவில்
தூக்கம் கலைந்தது
கலைத்ததை நிந்தித்து
தூக்கத்தைப் போற்றி
சற்று சிந்தித்தேன்
நிரந்தர தூக்கமும்
பேரானந்தம் தருமோ ?


ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

விநாயகர் சதுர்த்தி

முக்கண்ணர் மைந்தேரே 
முழுமுதற் கடவுளே 
கஷ்டங்களைத் தீர்க்கும் 
கருணைமிகு கஜமுகா 
இஷ்டங்களைக் கொடுக்கும்
இனிமைமிகு இறைவா 
தும்பிக்கையினால்  நம்பிக்கையளிக்கும்
அழகுமிகு ஆனைமுகா  
வினைகளைத் தீர்க்கும் 
வீரமிகு விநாயகா  
பக்தர்களைக் காக்கும் 
பாசமிகு பிள்ளையாரப்பா 
உந்தன் பிறந்தநாளில் 
நல்லருள் வேண்டி 
வாழ்த்துப் பாடி   
வணங்குகிறேன் விக்னேஸ்வரா !



வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நகை !

நடமாடும் நகைக் கடையாய்
நகர்வலம் வந்து பழகாமல்
நல் இதழில் நகையுடன்
நகர்வலம் வந்து பழகினால்
வாழ்வில் எந்நாளும் பொன்னாளே !!







                                                  நகை   Vs   நகை   





செவ்வாய், 3 செப்டம்பர், 2013

மன அமைதி

முடியணிந்த மன்னரானாலும் வாங்க  
முடியாத மன அமைதி 
முற்றும் துறந்தவருக்கு என்றும் 
முடிவில்லாத வற்றாத ஜீவநதி !

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

கோடி !

கோடிகளில் தினம் புரளும் 
கேடிகளை விட தெருக் 
கோடிகளைப்  சுத்தம் செய்யும் 
துப்புரவாளர் மேல் !




புதன், 14 ஆகஸ்ட், 2013

நன்றி நவிலல்


                                                                                                                                          ஆடி 28, 2013


இன்று அடுத்த  அகவையில்  அடியெடுத்து வைக்கும்  எனக்கு,அதனை அகவை இருபத்தெட்டு என்றழைப்பதா இல்லை ஒன்றென்று அழைப்பதா என்பதில் சிறு  குழப்பம் ! அதற்கு முன் ...


நிற்கவே முடியாதென
நினைத்த எனக்கு
நடக்க முடியுமென
நம்பிக்கையளித்த உற்றாருக்கும்
நல்ல மருத்துவர்க்கும்
நடக்கவே வைத்த
நற்கருணை இறைவனுக்கும்
நற்றமிழில் நவில்கிறேன்
கணக்கிலடங்கா நன்றிகளை   !









திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மணம் !

பிறந்த பின்
கடவுள் இவரென
அடையாளம் காட்டும்  
பெற்றோரை நம்பும் நாம் 
வளர்ந்த பின் 
துணை இவரென 
அடையாளம் காட்டும்போது
அவரை நம்ப மறுப்பதேனோ ?



ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

கால மாற்றம் !


பழமொழி 

கண்ணால் காண்பதும் பொய் 
காதால் கேட்பதும் பொய் 
தீர விசாரிப்பதே மெய் 

பழைய ஏற்பாடு 

ஏடுகளில் காண்பதும்  பொய் 
பறையில் கேட்பதும் பொய் 
தீர அக்கம் பக்கம்  விசாரிப்பதே மெய் 

புதிய ஏற்பாடு 

வெப்சைட்டில்   காண்பதும்  பொய்
போன் Adல் கேட்பதும் பொய் 
தீர  review  படிப்பதே மெய்