ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ம(ன)ருத்துவத் திருடி

உன்னை கண்டதிலிருந்து
பைத்தியமாய் அலைகிறேன்
பைத்தியங்களுக்கு  வைத்தியம்
பார்க்கும் உன்
வைத்திய மனதில்
கிடைக்கும் இடத்திற்காக !



புதன், 29 அக்டோபர், 2014

சமர்ப்பணம்

வேலின் வேந்தனே, வள்ளி மணாளனே
மயில் வாகனனே, மனதைக் கவர்ந்தவனே
சேவற் கொடியோனே, சிந்தையில் நிறைந்தவனே
எப்பொழுதும் தவறாமல், எப்பொழுதும் வருவாய்
எப்பொழுதும் குறையாமல் , எப்பொழுதும்அருள்வாய்
சமரனே உன்னிடம், சமர்பிக்கின்றேன் என்னை !




செவ்வாய், 21 அக்டோபர், 2014

வெங்காயக் காதல் !

முதல் வகுப்பில்
முதல் மதிப்பெண் எடுத்த
குழந்தை மீது காதல் !

ஐந்தாம் வகுப்பில்
பைவ் ஸ்டார் பிடுங்கிய
பெதும்பை மீது காதல் !

பத்தாவது, பணிரெண்டாவதில்
பரீட்சைக்கு பிட் கொடுத்த
வஞ்சிகள் மீது காதல் !

கல்லூரியில் கண்ட
எல்லா  கன்னிகள் மீதும் காதல் !

படிக்கிற வயதில் 
பாடம் தான் காதல் 
என பெரியவர்கள் சொன்னார்கள்,
படித்தேன், வேலை கிடைத்தது !

வேலை செய்யுமிடத்தில் 
வெங்காயம் !!!!
எல்லா வெங்காயமும் விலை போய்விட்டன !
கண்ணீர் மல்க இயற்றினேன் 
இக் கவிதையை 
வெங்காயம் வெட்டிக்கொண்டு தனியாக !




புதன், 1 அக்டோபர், 2014

கிக்

டூ பீஸ்ஸில் சுற்றும் 
மேலைநாட்டு ஒயினை விட
தெருவோரத் தலை நிமிரா
தமிழ்நாட்டு கள்ளுக்கு கிக்கதிகம்


வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

விநாயகர் சதுர்த்தி

வேழ முகத்தோனே
              வினைகள் தீர்பவனே
வேதங்களின் முதல்வனே
               ஞானத்தின் தலைவனே
சித்தி புத்தியின்
               சீர்மிகு நாயகனே
வேண்டிய நல்லதை
                   வேண்டிய தருணத்தில்
வாரி வழங்கும்
                  பாரி வள்ளலே
சிரம் தாழ்த்தி
                 பணிந்தோம் அய்யா
சிறப்பான வாழ்வை
               சீவனுக்கு அளித்தமைக்கு !






             





ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

நில நடுக்கம் !

நிலம் அதிர்ந்ததை
உணர்ந்தேன்
நில நடுக்கமென்பதை
உணரவில்லை
என்னை கெடுத்துவிட்டது
தமிழ் சினிமா
பாத்திரம் உருள்வது தான்
நில நடுக்கமென்று


செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

நாயகி

பெண்ணே
பல நேரங்களில்
என்னைப் பார்க்காமல்
களவாடிச் செல்கிறாய்
சில நேரங்களில்
என்னைப் பார்த்து
புத்துயிர் அளிக்கிறாய்
உண்மை சொல் 'நாயகி'யே
நீ நல்லவளா ! கெட்டவளா !



சனி, 12 ஜூலை, 2014

முடியா மனப் போர்

முடியாத போரில்
முட்டிக் கொள்கின்றன
உனை காணச் சொல்லி
என் கண்களும்
கடந்து போகச் சொல்லி
என் மனதும்

தற்காலிகமாய்
வெற்றி பெற்றன
சில நேரங்களில்
கண்களும்
சில நேரங்களில்
மனதும்

பல நேரங்களில்
கண்களின் வெற்றி
கணத்தில் கரைந்தது
பெண்ணே உனக்கு
பக்கத்தில் ஏற்கனவே
அடி வாங்கும்
வலியவனை கண்டவுடன்

வெள்ளி, 13 ஜூன், 2014

மதுரை மீனாட்சி

பச்சைப் பட்டுடுத்தி
பைங்கிளியை  பாகம் வைத்து
நினை தொழுவோரின்
நினைவெல்லாம் நிவர்த்தி செய்து
தலை வணங்குவோரின்
தலைவிதியை மாற்றித் தொடுத்து
சங்கத்தமிழ் மதுரையை
சுந்தரமாய் ஆட்சி செய்யும்
மீனாட்சி தாயே
உனை மனதார போற்றுகின்றோம்



செவ்வாய், 10 ஜூன், 2014

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்?

தோகை மயில் தேகம் சுமக்க 
வேலும் தண்டமும் கரங்களில் தவழ 
துணைவியர் இருவரும் புஜங்களைக் கவர 
இடும்பனும் சேனையும் உன்னடி தொடர 
தினமென்னைக் காத்து திருவருள் புரியும் 
குழகனே, ஐம்முகனின் குமரனே, சரணடைந்தேன் 
உன் தாள் பெரும் உவப்புடனே