திங்கள், 30 டிசம்பர், 2013

அனுமன் ஜெயந்தி

இராமனின் துயர்தீர்க்க
கடலைக் கடந்தாய்  
சீதையின் துயர்தீர்க்க 
கணையைக் கொடுத்தாய்
இலக்குவனின் துயர்தீர்க்க 
இமயம் சுமந்தாய்
பாண்டவர் துயர்தீர்க்க 
கொடியாய் பறந்தாய்
எந்தன் துயர்தீர்த்து
எப்பொழுதும் அருளும்  
அஞ்சனை மைந்தா அஞ்சா நெஞ்சா
வாயு புத்ரா வீர ஆஞ்சநேயா
ஜெயத்தின் உருவே ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !







புதன், 25 டிசம்பர், 2013

கிறிஸ்துமஸ்

ஆட்டுவிக்கும் இறைவனாயிருந்தும்
ஆட்டினையும் அரவணைத்து
கன்னத்தில் அறைந்தாலும்
கபடமற்ற அன்பை
கள்வருக்கும் காட்ட 
போதித்து, சிலுவையில்
அறைந்தாலும் சிலிர்த்துதெழுந்த
சின்ன குழந்தைக்கு
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !



திங்கள், 23 டிசம்பர், 2013

கண்ணா .. கருநீல வண்ணா ..

தர்மத்தை நிலைநாட்ட
கம்சனை வதைத்தாய்
நெறியை நிலைநாட்ட
கீதையைப் படைத்தாய்

அன்பை வெளிக்காட்டி
கோபியரைக் கவர்ந்தாய்
நற்பண்பை வெளிக்காட்டி
ராதையை மணந்தாய்

சேலை மாலையால்
திரௌபதியைக் காத்தாய்
மலர் மாலையால்
கோதையை ஈர்த்தாய்

குசேலன் குறைதீர்க்க
அவலைப் புசித்தாய்
பாண்டவர் குறைதீர்க்க
போர்க்களம் புகுந்தாய்

மார்கழித் திங்களில்
மகிழ்ந்தே படைத்தேன்
நீயருளிய பாமாலையை
உந்தன் பூமாலையாக !



சனி, 14 டிசம்பர், 2013

இசை

நடுநிசியில் கொள்ளை போவது  
நம் பொருள் மட்டுமல்ல 
இசையில், நம் இதயமும்தான் ..

சனி, 7 டிசம்பர், 2013

முத்தமிழ் சுடர் !

சுடராய் உதித்தவன், முத்தமிழின் முதல்வனவன்
நீல வானில் நீக்கமற நிறைத்தவன்
நெய்தலில் வினையறுத்து, குறிஞ்சியில் அமர்ந்தவன்
காற்றின் வேகத்தில் கஷ்டங்களைக் களைபவன்
வற்றாமல் அருளும் சுனையவன், துணையவன் .






ஞாயிறு, 1 டிசம்பர், 2013

மறதி

இன்றே சேமிக்கிறோம்
நாளைய வீட்டிற்கு
இன்றே வருந்துகிறோம்
நாளைய வாழ்வுக்கு
இன்றே கணக்கிடுகிறோம்
நாளைய வரவிற்கு
இன்றே முடிவெடுக்கிறோம்
நாளைய பிரச்சனைக்கு
கண்ணிமைக்கும் நேரத்தில்
காட்சிகள் மாறும்
என்பதை மறந்து ...






திங்கள், 25 நவம்பர், 2013

நம்பிக்கை

சாலையில் முன்
செல்லும் வாகனத்தை
நம்பி பயணிக்றோம்
நம்ப மறக்கிறோம்
வாழ்க்கையில் கூடவே
வரும் நம்பிக்கையை !

சனி, 23 நவம்பர், 2013

குழந்தை வேலன் !


கொஞ்சத் தூண்டும் குழந்தை வேலா  

மனதைத் திருடும் கள்வனே கந்தா
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரா
கருணையின் வடிவே அழகனே கதிரேசா ..


மனதைத் திருடும் கள்வன் உனை
கையில் ஏந்திக் கொஞ்சவும் தோனுதே
கணநேரமும் அகலாதே, கருத்தினில் மறையாதே 
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரனே ..



புதன், 20 நவம்பர், 2013

புறம்போக்கு

பயிர் இல்லா 
நிலம் மட்டும் 
புறம்போக்கு அல்ல 
யாருக்கும் உதவா 
நற்  குணமில்லா 
மனித மனமும்தான் ...

திங்கள், 18 நவம்பர், 2013

பயம்

பயம்
நடுங்க வைக்கும்
பயத்தை
நடுங்க வைக்காவிடில் !